குழந்தைகள் தினம்…..கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின்–செய்தி
குழந்தைகள் தினத்தையொட்டி இலங்கை, பாண்டிச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 குழந்தைகள் மரக்கன்றுகள் நட்டனர்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று குழந்தைகள் தினத்தையொட்டி இலங்கை, பாண்டிச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 குழந்தைகள் மரக்கன்றுகள் நட்டனர்.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு முக்கிய தினங்களில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டு குழந்தைகள் தினத்தை நவம்பர் 14 முதல் 21 வரை கொண்டாடினர். இந்த ஒரு வார காலத்தில் மரக்கன்று நட்டு செல்ஃபி எடுத்து அனுப்பும் குழந்தைகளுக்கு பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும் என அறிவித்து இருந்தனர். அறிவிப்பை தொடர்ந்து இலங்கை, பாண்டிச்சேரி மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 150 பேர்கள் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இது குறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில், மரக்கன்றுகள் வளர்க்கும் ஆர்வம் குழந்தைகள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடுவோம். தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவே சமூக வலைதளங்களில் அறிவிப்பை வெளியிட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட தமிழகம் மட்டுமின்றி இலங்கை, பாண்டிச்சேரி பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வழங்கவுள்ளோம். தொடர்ந்து பாராமரித்து வளர்க்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கவுள்ளோம். தென்னை, சந்தனம், தேக்கு, செம்மரம், மாங்கன்று, பூவரசு, பப்பாளி, கொய்யா, பலா போன்ற மரக்கன்றுகளை நட்ட இக்குழந்தைகளுக்கு பெற்றோர்களும், வகுப்பு ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர், இவர்களைப்போன்றோர்களால்தான் நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரிக்கவுள்ளது என்றார்.