காரைக்கால் –கோர்ட்டு கட்டிடங்கள் திறப்பு — கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
. கோர்ட்டு கட்டிடங்கள் திறப்பு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 கோர்ட்டு கட்டிடங்கள் (குற்றவியல் 1 மற்றும் 2) திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி ரிமோட் மூலம் கோர்ட்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைசெயலர் ராஜீவ்வர்மா, புதுச்சேரி நீதிபதி செல்வநாதன், மாவட்ட நீதிபதி அல்லி, கலெக்டர் முகமது மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர். எளியவருக்கும் சட்ட ஆலோசனை விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- நீதியை ஒரு போதும் தாமதப்படுத்தக்கூடாது. தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். மிக அதிகமான வழக்குகளை குறுகிய காலத்தில் நடத்தி முடித்தவர் என்ற பெருமை நீதிபதி ராஜாவை சேரும். நீதித்துறையில் அவர் இன்னும் பல உயரிய நிலையை அடைய வேண்டும். உலகத்தில் பல நாடுகள் கற்காலத்தில் இருந்த சூழலில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில், அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். எந்த ஒரு மாநிலத்தில் நீதி வழுவாமல் அரசாட்சி நடக்கிறதோ, அங்கே செல்வம் செழிக்கும். மக்கள் வாழ்க்கை சிறப்புமிக்கதாக இருக்கும். எளியவர்களுக்கு கூட சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்று நினைப்பதைப் போல, எளியவர்களுக்கும் சிறப்பான சட்ட ஆலோசனை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மறுக்கப்பட்டு விடக்கூடாது எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல, நீதி வழங்குவதை விரைவாக செய்யுங்கள். அரசியல்வாதிகளுக்கு வாக்கு மூலதனம். வக்கீல்களுக்கு நாக்கு மூலதனம். விவாதம் சரியாக செய்தால் எந்த வழக்கிலும் வெற்றி பெற்று விட முடியும். இவ்வாறு அவர் கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை காரைக்கால் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துகுமரன், செயலர் திருமுருகன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.