காய்ச்சல்..இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று.!
சென்னையில் கடந்த சில நாட்களாக பரவலாக காய்ச்சல் இருமல் என்பது பரவி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளன. யாரைக்கேட்டாலும் உடல் நிலை சரியில்லை என கூறிய வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி என நீடிக்கிறது. என்ன காரணம் என தெரியாமல் இருந்த நிலையில் பொது சுகாதார துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஆய்வுகளின் முடிவில் சென்னையில் பரவிவரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆஎஸ்வி வைரஸ் தொற்றும் பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் பரவி வந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் இது எந்த வகை வைரஸ் என கண்டறிய பொதுசுகாதாரத்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை தோராயமாக சேகரித்து அனைத்து விதமான வைரஸ் டெஸ்டும் செய்யப்பட்டது. சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மொத்தம் 21 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா என பகுப்பாய்வு செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், தற்போது சென்னையில் பரவி வரும் வைரஸ் பாதிப்புகள் புதியவை அல்ல. எனவே, அவை ஒரு வாரத்துக்குள் குணமடைந்துவிடக் கூடியவைதான். அதேவேளையில் முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டாமிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கலாம்..