காணவில்லை—-வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள்….?
வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான நடவடிக்கையில், தொழிலாளர் துறை மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. 1956ல் உருவாக்காப்பட்ட இந்த சட்டத்தின்படி, தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களின் மீது, 50 ரூபாய் அபராதம் விதிக்க முடியும் மேலும், தமிழ், ஆங்கிலம், விருப்ப மொழி என்ற அடிப்படையில், 5:3:2 என்ற விகிதத்தில், எழுத்துகளின் அளவு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. ஆனால், சென்னையில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர்ப்பலகை இல்லை. அதேபோல், சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில், 30 சதவீதம் வரையிலான வணிக நிறுவனங்களில், தமிழ் பெயர்ப் பலகைகள் இல்லை. அந்த நிறுவனங்களுக்கு, ஆட்சி மொழி சட்டத்தின் நகலை வழங்கியும், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் விளக்கி உள்ளனர். மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் தமிழில் பெயர்ப்பலகை இருந்தாலும், ஆங்கில எழுத்துகளின் அளவு உள்ளது.இதுகுறித்து, வணிகர் சங்க நிர்வாகிகளுடனும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. என்றாலும், வணிக நிறுவனங்களிடம் அபராதம் விதிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தொழிலாளர் துறையிடம்மட்டுமே அதிகாரம் உள்ளது. நிறுவனங்கள் துவங்கும் போதே, தமிழில் பெயர்ப்பலகை வைத்த புகைப்படத்தை ஆராய்ந்த பின் தான் அனுமதி வழங்க வேண்டும். வணிக அனுமதியை புதுப்பிக்கும் போதும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும்.’மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்திய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட ஆலோசனைகளை தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்தும், தொழிலாளர் துறை மெத்தனமாக உள்ளது. இதனால், தமிழ் பெயர்ப்பலகை திட்டம் தொய்வடைந்துள்ளது. இது, தமிழ் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.