கலெக்டர் ஆய்வு –அம்பகரத்தூர் சாலையில் பாலம் உள்வாங்கியது
காரைக்காலில் பெய்த தொடர் மழையால் அம்பகரத்தூர் சாலையில் உள்ள பாலம் உள்வாங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர் மழை தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. நேற்றும் இந்த மழை நீடித்தது. காலை முதலே மிதமான மழை கொட்டியது. மழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. பாலம் உள்வாங்கியது தொடர் மழை எதிரொலியாக காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் தாமனாங்குடி அருகே ஏற்கனவே வலுவிழுந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று இன்று காலை திடீரென்று உள் வாங்கியது. இதன் காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம் வழியாக கும்பகோணம் செல்லும் தார்சாலை சேதமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பாலம் சேதமடைந்த பகுதி வரை பஸ்களில் வந்து இறங்கிய பொதுமக்கள், பின்னர் மறுமார்க்கமாக நடந்து வந்து வேறு வாகனங்களில் சென்றனர். இதுபற்றி அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிந்த பாலத்தை பார்வையிட்டனர். பின்னர் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சேதமடைந்த பாலத்தை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.