கர்நாடக மாநில முதலமைச்சராகிறார் சித்தராமையா….
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்துள்ளது.இதையடுத்து காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் இடையே ஏற்பட்ட போட்டியால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சித்தராமையாவை முதல்வராகவும் டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிவக்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் 6 துறைகளை வழங்க உறுதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இன்று இரவு 7 மணி அளவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நாளை மறுநாள் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.