கச்சத்தீவு—புனித அந்தோணியார் தேவாலய திருவிழா.
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 2,408 பக்தர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவில் இந்தியா – இலங்கை இரு நாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொரோனாவால் கடந்த 2020, 2021ல் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூஜை செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து மிகவும் குறைவான பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஒரே நாளில் சிறப்பு திருப்பலி பூஜை முடிந்தது. இம்முறை நடைபெறும் அந்தோணியார் திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு இந்திய அரசு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை இலங்கைக்கு வழங்கியது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் இருந்து 2,408 பக்தர்கள், 72 படகுகளில், இன்று காலை 6 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் கச்சத்தீவு புறப்பட்டனர். பகல் 12 மணிக்கு மேல் கச்சத்தீவை சென்றடையும் இவர்கள், மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து சிலுவைப்பாதை, திருப்பலி பூஜை, தேர்பவனி நிகழ்வுகளில் பங்கேற்று நாளை அதிகாலை இருநாட்டு பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். பின்னர் காலை 8 மணிக்கு மேல் படகில் ராமேஸ்வரம் திரும்புகின்றனர்.