பாஜக–டெல்லியில் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் முயற்சி..
டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் டெல்லி சட்டசபையில் எதிரொலித்தது. டெல்லியில் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் முயற்சி என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் காரசார வாதத்தை முன்வைத்தனர்.கஸ்தூரிபா நகர் எம்.எல்.ஏ. மதன்லால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டினார். கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டு ஆட்சி நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று துணை நிலை ஆளுநர் தெரிவிப்பதாகவும், இதன் மூலம் அவசரநிலை போன்ற சூழல் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.சிறையில் இருந்து ஆட்சி நடத்த கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். டெல்லி சட்டசபை கலைக்கப்படும் என்று பீதி கிளப்பப்படுவதாகவும் அதற்கான நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். பாஜக-வின் அழுத்தங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அடிப்பணியாது என்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.