உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும்
உழவர்கரை நகராட்சியை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார். அதேநேரத்தில் அரியாங்குப்பம், வில்லியனூரை நகராட்சியாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் முதல்- முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது. கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கேட்ட கேள்விக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த பதிலை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:- மக்கள் தொகை எவ்வளவு? கேள்வி:- மாகி, ஏனாம் நகராட்சிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை எவ்வளவு? அந்த நகராட்சிகளின் மூலம் அரசுக்கு வரும் வருவாய் எவ்வளவு? பதில்:- மாகியில் தற்போது 54 ஆயிரத்து 672 பேரும், ஏனாமில் 72 ஆயிரத்து 360 பேரும் வசிக்கின்றனர். மாகி நகராட்சி மூலம் ரூ.3 கோடியே 71 லட்சத்து 889 வருவாய் கிடைத்தது. ஏனாமில் ரூ.2 கோடியே 5 லட்சத்து 32 ஆயிரத்து 841 வருவாய் கிடைத்தது. தற்போது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 252 பேரும், அரியாங்குப்பத்தில் 92 ஆயிரத்து 785 பேரும் வசிக்கின்றனர். வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ரூ.5 கோடியே 25 லட்சத்து 12 ஆயிரத்து 355-ம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் ரூ.4 கோடியே 51 லட்சத்து 72 ஆயிரத்து 933-ம் வருவாய் கிடைத்தது. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியை இணைத்து மாநகராட்சி ஆக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. அரியாங்குப்பம், வில்லியனூரை நகராட்சி ஆக்கலாம். கொம்யூன் பஞ்சாயத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா:- வேண்டாம். அவை கொம்யூன் பஞ்சாயத்து ஆகவே இருக்கட்டும். இல்லாவிட்டால் நீங்கள் அந்த வரி, இந்த வரி என்று 17 வகையான வரி போடுவீர்கள். சிவசங்கர் (சுயே):- புதுவை நகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வந்துள்ளது. அதனால் இங்கு வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் உழவர்கரை நகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இல்லாததால் நாங்கள் திரிசங்கு நிலையில் உள்ளோம். எனவே புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியை இணைத்து மாநகராட்சி ஆக்குங்கள். ரங்கசாமி:- புதுவையை மாநகராட்சி ஆக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது..