உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்சிக்கினான்
உ.பியின் பரூக்காபாத் மக்களவை தொகுதியில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு பாஜ சார்பில் முகேஷ் ராஜ்புத்தும், இந்தியா கூட்டணி சார்பில் சமாஜ்வாடி கட்சியின் நவல்கிஷோர் சாக்கியா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின்போது எடா மாவட்டத்தில் உள்ள கிரி பாமறன் கிராம வாக்குச்சாவடியில் 16 வயது சிறுவன் ஒருவர் தாமரை சின்னத்தில் பாஜவுக்கு தான் 8 ஓட்டு போட்டதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த சிறுவனின் தந்தை பாஜ நிர்வாகியாக உள்ளார்.மொத்தம் 7 கள்ளஓட்டுக்களை அந்த சிறுவன் போட தேர்தல் அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர். இப்படிதான் உ.பி முழுவதும் தேர்தல் நடந்ததா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வற்புறுத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பிறகாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இது பற்றி விசாரணை நடத்த உ.பி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
