ஆளுநர் ஒப்புதல்–உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு….நாளை…!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்கோரிக்கைவிடுத்துவந்தனர்.இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது தலைமை செயலகத்தில் தயாராகும் புதிய அறைஇதேபோல, சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பதாக, அதன் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் என்பதால், ஆச்சரியப்படத் தேவையில்லை என பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், மூத்த அமைச்சர்கள் மத்தியில் உளக்குமுறல் இருக்கத் தான் செய்யும் எனவும் கூறியுள்ளனர். உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவரது நண்பரும், நடிகருமான விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை அடுத்து, கோட்டையில் அவருக்கு தனி அறை ஒன்று தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், 4 அமைச்சர்களின் இலாகாக்கள் நாளை மாற்றம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.