ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு—சுதந்திர போராட்ட வரலாறு…..?
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை உண்மைத் தன்மையுடன் மீண்டும் எழுத வேண்டும் என்றார். மவுண்ட்பேட்டன் இந்தியாவை விட்டு வெளியேறிய போது சில தலைவர்கள் கண்ணீர் சிந்தியது வேடிக்கையானது எனக் கூறிய ஆளுநர், அது ஆங்கிலேயரை எதிர்த்து போராடி உயிர்நீத்தவர்களின் தியாகத்தை கேள்விக்குறியாக்கியது என தெரிவித்தார். ஒரு கட்சியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் நமது ராணுவத்தை ஒதுக்கி வைத்தோம். ஆனால் பிரதமர் மோடி, 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். நான் தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன்.என்னிடம் 200 நபர்களை பற்றி கூறினார்கள். அவர்கள் தலைவர்கள் மட்டுமே, நிறைய பேர் களத்தில் போராடியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரம் மட்டுமே சுதந்திர போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” என தெரிவித்தார்.