அஸ்ஸாம்– மாணவனை கார் ஏற்றி கொன்ற வழக்கில் நடிகை கைது..
அஸ்ஸாமைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப், சமீபத்தில் வெளியான ‘ருத்ரா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் , குவஹாத்தியில் நடந்த விபத்து வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 21 வயது மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குவஹாத்தி காவல்துறையினர் தெரிவித்தனர்.ஜூலை 25-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தட்சிங்கான் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மாணவர் நல்பாரி பாலிடெக்னிக் மாணவர் சாஹிமுல் ஹக் என்றும், குவஹாத்தி மாநகராட்சியில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.சிசிடிவி பதிவுகளின்படி, ஹக் விளக்கு அமைக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அவர் மீது மோதியது. காஷ்யப் தான் காரைஓட்டினார்என்றுகூறப்படுகிறது. மேலும், காயம் அடைந்தவருக்கு உதவிகூட செய்யாமல் நடிகை அங்கிருந்து தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்ததும், ஹக்கின் சக ஊழியர்கள் அந்த வாகனத்தை துரத்திச் சென்று கஹிலிப்பராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடித்தனர். காஷ்யப் அந்த SUV காரை மறைக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. முதலில் காஷ்யப்பை காவல்துறையினர் விசாரித்து அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த சமயத்தில், ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஹக் இறந்த பிறகு, கொலைக் குற்றமாக மாற்றி, கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ஜாமீன் பெற முடியாத குற்றம் ஆகும்.குவஹாத்தி காவல்துறையின் DCP (Traffic) ஜெயந்தா சரதி போரா இதுகுறித்து NDTV-க்கு அளித்த பேட்டியில், “நடிகை நந்தினி காஷ்யப்பை இன்று கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர் இறந்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று கூறினார்.ஹக் தனது குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குவஹாத்தி மாநகராட்சியில் வேலை செய்து கொண்டே, நல்பாரி பாலிடெக்னிக்கில் தனது கல்வியையும் தொடர்ந்து வந்தார். இந்த விபத்தில் ஹக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, தொடை மற்றும் கைகளிலும் எலும்புகள் உடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முதலில் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாக நந்தினி காஷ்யப் உறுதியளித்திருந்தாலும், எந்த உதவியும் செய்யவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.