அரசு அதைக் கையாண்ட அக்கறை..
ரயில்விபத்தைவிடவும்
அலட்சியமும், கொடூரமும் நிறைந்தது
அரசு அதைக் கையாண்ட அக்கறை..
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மாலிக், 24 வயது. அப்பா ஹேலாராம். பிஸ்வஜித்தை கோரமண்டல் ரயிலில் ஏற்றி அனுப்பினார் ஹேலாராம்.ரயில் விபத்துக்குள்ளான செய்தி கேட்டதும் மகனுக்கு தொலைபேசியிருக்கிறார். தான் காயம்பட்டு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மகன்.ஹேலாராம் உடனே தன் நண்பரின் ஆம்புலன்சில் 230 கிமீ பயணித்து விபத்து நடந்த இடத்துக்கு வருகிறார். மகனைத் தேடுகிறார். எந்த மருத்துவமனையிலும் மகனைக் காணவில்லை.அப்போது, பஹாநாகா பள்ளியில் தற்காலிகமாக பிணவறை அமைத்திருக்கிறார்கள், அங்கே போய்ப் பாருங்கள் என்று யாரோ சொல்ல, அங்கே போயிருக்கிறார்.அங்கே போனபோது, அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பிணவறையில் திடீர் குழப்பம். சடலங்களில் ஒன்று கை அசைப்பதாக யாரோ சொல்ல, இவர்கள் போய்ப் பார்த்தபோது, அங்கே உயிருடன் இருக்கிறார் பிஸ்வஜித்.பையனை அள்ளிப்போட்டுக்கொண்டு கொல்கத்தாவுக்கே கொண்டு போய் சிகிச்சை அளித்திருக்கிறார் தந்தை.இறந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களை ஏதோ குப்பைபோல வேன்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு போன வீடியோவை எல்லாருமே பார்த்திருப்பீர்கள். ஒருவரின் உடலை மருத்துவர் பரிசோதித்துத்தான் பிணவறைக்குக் கொண்டு போக முடியும். இந்த சம்பவத்திலிருந்து, சடலங்களை மருத்துவர்கள் யாரும் பரிசோதிக்கவில்லை என்பது தெளிவு.இதைப் படித்ததும், பிஸ்வஜித் போல இன்னும் யாரேனும் உயிருடன் பிணவறைக்குக் கொண்டு போகப்பட்டிருக்கலாம் என்னும் அச்சம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.