அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு —- உத்தரவு..?
சொத்துக் குவிப்பு மறு ஆய்வு வழக்கில் தீர்ப்பை
எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 சமயத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரை விடுவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதே காலகட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மீதும் 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசுவும் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்று அவரை வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், தாமாக முன்வந்து வழக்கை மறுஆய்வுக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி காட்டினார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வந்தது.இந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவுகளை ரத்து செய்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இவ்வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார். விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதனை எதிர்த்து இரு அமைச்சர்களும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அதில், “சொத்துக் குவிப்பு வழக்கில் விரிவான விசாரணை நடத்திய பிறகுதான் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் எங்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிப்பதோடு, தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தனர்.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, சாத்தூர் ராமச்சந்திரன் சார்பில் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
தமிழக அரசு தரப்பில், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு தவறானது எனக் கூறி பல்வேறு வாதங்களை முன் வைத்தனர். இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அத்துடன், உயர்நீதிமன்றப் பதிவாளரும் பதிலளிக்கஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, மேலும் வாதங்கள் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.