வால்பாறை காடுகளில் நீர் வரத்து குறைவு–வனத்துறைஅதிக கவனம்தேவை…?
வால்பாறை காடுகளில் நீர் வரத்து குறைவு – குடியிருப்பு பகுதிகளுக்கு நெருங்கும் வன விலங்குகள்பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக கவனம் செலுத்த வனத்துறை எச்சரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள காடுகளில், சமீப காலமாக நீர் ஆதாரங்கள் குறைந்து வருவதால் வன விலங்குகளின் இயல்பான வாழ்விடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக யானைகள் மற்றும் காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக காடுகளை விட்டு வெளியே வந்து, சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகின்றன.குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதை, தேயிலை தோட்ட பகுதிகள், குடியிருப்புகள் அருகே வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகன ஓட்டிகள் திடீர் மோதல்களை தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வன விலங்குகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, அருகில் செல்வது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.எனவே வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் இரவு நேர பயணங்களைதவிர்ப்பதும்,வனப்பகுதிகளில் தேவையற்ற சத்தம் எழுப்பாமல் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் அவசியம் என வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
