ராமதாஸ்க்கு திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லையா…?
![]()
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் அரசியலில் புதிய, புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்ட பாமக, உட்கட்சி மோதலால் இரு பிளவாக பிரிந்துள்ளது. இதனால் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எந்த பக்கம் நிற்க வேண்டும் என தெரியாமல் தவித்து வருகிறார்கள். கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்- பாமக தலைவர் அன்புமணி இடையிலான மோதல் வெளிஉலகத்திற்குதெரியவந்தது.இதனையடுத்து பாமக யாருக்கு என்ற போட்டியால் இரு தரப்பும் போட்டி போட்டு நிர்வாகிகளை நீக்கி வருகிறார்கள்.ஒரு கட்டத்தில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமகவின் தலைவர் எனவும் அறிவித்தார். இந்த நிலையில் பாமகவின் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை அங்கீகரித்து கடிதம் எழுதியது. இதனால் அதிருப்தி அடைந்த ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது 3 வார காலத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அதே நேரம் அன்புமணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ராமதாஸ், திமுக கூட்டணியில் இணைய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவில் அன்புமணிக்கு கொடுத்த தொகுதிக்கு இணையான தொகுதிகள் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த வகையில் குறைந்தது 15 தொகுதிகளை கேட்டார். ஆனால் திமுக தரப்போ 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என தெரிவித்து விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமதாஸ், கடந்த சில மாதங்களாக முதலமைச்சர்ஸ்டாலினுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வந்தவர், கடந்த 4 நாட்களாக திமுக அரசு விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கூட்டணியில் திமுகவின் கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்தாக ராமதாஸ் முன்பு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. அதில் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது, அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது. தனியாக வட மாவட்டங்களில் மட்டும் போட்டியிடுவது என்ற வாய்ப்புகள் உள்ளது. இதில் தவெகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தனித்து போட்டியிடுவது என முடிவு எடுத்தால் தேர்தலை எதிர்கொள்ள பணம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே தற்போது ராமதாஸ்க்கு உள்ள ஒரு வாய்ப்பாக அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணியுடன் சமரசம் செய்து கொள்வது மட்டும் தான் வாய்ப்பாக உள்ளது. எனவே வரும் நாட்களில் ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்துள்ளது.