ராமதாசுக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது என முக ஸ்டாலின் கடும் விமர்சனம் !
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். மேலும் 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக பேசும் போது கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு மக்களைப் பற்றி கவலை கிடையாது அவருக்கு பணத்தைப் பற்றித்தான் கவலை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி. அதிமுகவுடன் சேர்ந்து பாமக போட்டியிட்டபோது அவர்கள் 7 தொகுதிகளில் நின்றனர். அன்றைக்கும் மாநிலங்களவை எம்.பி. பதவி உறுதியளிக்கப்பட்டிருந்தது. 7 தொகுதியில் போட்டியிட்டு 9 தொகுதியில் தோற்பார்கள் என்று கூறினேன்.
இப்போதும் அதே போன்றுதான் 7 மக்களவை தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதே டாக்டர் ராமதாஸ் அதிமுக ஆட்சியை விமர்சித்து வெறும் மேடையில் பேசிவிட்டு செல்லவில்லை. அறிக்கை விடவில்லை. அதிமுகவின் கதை என்ற தலைப்பில் புத்தகமே எழுதியுள்ளார். அப்படிப்பட்டவர் இன்று அதிமுக நிர்வாகிகள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார்.
இந்த நிலைமையில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் மக்களையோ, நாட்டையோ பற்றி கவலைப்படவில்லை. ராமதாஸ் பணத்தைப் பற்றிதான் கவலைப்படுகிறார் என முக ஸ்டாலின் கூறினார்.