Others
மாலத்தீவுக்கு முதல் ஆளாக பக்ரீத் வாழ்த்து சொன்ன மோடி.. அசந்து போன முகமது முய்சு.
ஆசிய பிராந்தியத்தில் அண்ணன் – தம்பியை போல ஒற்றுமையாக இருந்த இந்தியா – மாலத்தீவு, தற்போது எதிரெதிர் துருவங்களாக மாறி இருக்கிறது. சீனாவின் தொடர் சூழ்ச்சியின் காரணமாக மாலத்தீவு, இந்தியாவை விட்டு விலகிச் செல்ல தொடங்கி இருக்கிறது. ஆசியாவில் ஏனைய நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்த நினைத்த சீனா, அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்தி வருகிறது. கடனை அள்ளி அள்ளிக் கொடுத்து இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான இலங்கையை தன்வசம் ஆக்கிக் கொண்டது சீனா. அதேபோல, மாலத்தீவுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அந்நாட்டுக்கும் கோடிக்கணக்கில் கடனை அள்ளிக் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்துவிட்டது சீனா. பற்றாக்குறைக்கு, மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற முகமது முய்சு, தீவிர சீன ஆதரவாளர் என்பதால் அவரை தனது கைப்பாவையாக சீனா மாற்றிவிட்டது. சீனாவை குளிர்விப்பதற்காக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சீனாவின் உளவுக்கப்பலை தனது நாட்டு துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்தது; மாலத்தீவு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது என அடுத்தடுத்து இந்தியாவை சீண்டி வருகிறது மாலத்தீவு.இத்தனை நடந்த போதிலும், மாலத்தீவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் முதல் ஆளாக இந்தியா தான் போய் உதவி செய்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தில் சிக்கிய மாலத்தீவுக்கு கப்பல் கப்பலாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்தது இந்தியா. அதுமட்டுமல்லாமல், பொருளாதார சிக்கலில் சிக்கிய மாலத்தீவுக்கு இரு மாதங்களுக்கு முன்பு 50 மில்லியன் டாலர்களை இந்தியா உடனடியாக வழங்கியது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு அழைப்பு விடுத்ததோடு, தனக்கு அருகில் அவரை அமர வைத்து இந்தியாவின் சகோதர பாசத்தை மோடி வெளிப்படுத்தினார்.இந்நிலையில், இன்று பக்ரி பண்டிகையை முன்னிட்டு முதல் ஆளாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மாத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும், மாலத்தீவு மக்களுக்கும் பக்ரித் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகிய பண்புகளை எடுத்து சொல்லும் திருநாளாக பக்ரீத் விளங்குகிறது. இந்த திருநாளில் இந்திய – மாலத்தீவு மக்கள் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.