இந்திய ராணுவம் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளதாக முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை நிலவரம் மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அவர்கள் கூறும்போது, “விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது பாகிஹானின் ராவல் பிண்டி ராணுவ முகாமில் உள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் விமானம் மூலம் அவர் டெல்லி அல்லது மும்பை விமான நிலையம் வந்தடைவார். பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்ததை ரேடார் மூலம் கண்டறிந்தோம்.
விமான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறி வருகிறது.
நேற்று பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. எந்த இந்திய விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.
விமானப்படை வீரர் அபிநந்தன் மீட்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராகவுள்ளது. நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்டு கூறமுடியாது. இந்திய கடற்படை முழு எச்சரிக்கையுடன் இருக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் எல்லை நிலவரம், இந்திய படைகளின் தயார் நிலை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.