இனிமே சிக்கனம்….. சிக்கனம் மட்டும் தான்…! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!
TN government plans to more savings
சென்னை:
கொரோனா பேரிடரால், செலவினங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா, இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும் பெரும் பொருளாதார இழப்பில் சிக்கி தவிக்கின்றன.
2 மாதங்களாக தமிழக அரசுக்கு எந்த வொரு வருவாயும் இல்லாத நிலையில் கொரோனா கால பேரிடர் செலவையும் சமாளித்து வருகிறது. ஊரடங்குக்கு பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்த பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் அரசு செய்யும் மொத்த செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக பல அறிவிப்புகளை தலைமைச் செயலாளர் கே சண்முகம் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அரசு செலவிலான மதிய விருந்து, இரவு விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அலுவலகத் தேவைகளுக்கான பர்னிச்சர்கள் வாங்குவது 50 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.
அரசு விழாக்களில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும். அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களுக்கு விமானங்களில் செல்லும்போது ரயில்கட்டணத்துக்கு இணையானத் தொகைதான் வழங்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.