ஆந்திர மாநிலம், குண்டூர் மாநகராட்சி பெண் ஆணையர் நீதிமன்ற அவமதிப்பு செய்த வழக்கில், அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆந்திர மாநிலம் குண்டூர் மாநகராட்சிக்கு உட்பட இடத்தில் உள்ள யடவலி சத்திரத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் அங்கு ஒரு தனியார் பள்ளியை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, அந்த சத்திரத்தின் தற்போதைய வாரிசுதாரருக்கு குத்தகை பணமாக ரூ.25 லட்சத்தை பள்ளி நிர்வாகத்திடம் வசூலித்து வழங்கிட வேண்டுமென குண்டூர் மாநகராட்சி ஆணையருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், இது தொடர்பாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறி மனுதாரர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினார்.இதையடுத்து, உத்தரவை செயல்படுத்தாத குண்டூர் மாநகராட்சி பெண் ஆணையர் கீர்த்திக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற தாளாளரிடம் தாமாகவே முன்வந்து கீர்த்தி சரண் அடைய வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.