நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா…? மத்திய அரசு விளக்கம்!
PIB explains about another lockdown
டெல்லி:
நாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. 5 வது கட்ட ஊரடங்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது.
வட மாநிலத்தின் பிரபல ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. இந்நிலையில் அந்த செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படத்தை மாற்றி வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.