பழம்பெரும் நடிகர் ராஜேஷ் மரணம்..முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி
பள்ளி ஆசிரியராக இருந்த ராஜேஷ் வில்லியம்ஸை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் கே. பாலச்சந்தர். அவர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு வந்தார். சினிமா மீதும், கலைஞர்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த ராஜேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு 75 வயது.குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஷுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அவர் உயிரிழந்த செய்தி வெளியாகி திரையுலக பிரபலங்கள், ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய செய்திருக்கிறது.மறைந்த பிரபல இயக்குநரான மகேந்திரனின் உறவினர் ராஜேஷ். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் மகேந்திரனின் மகனும், இயக்குநருமான ஜான்1979ம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே படம் மூலம் ஹீரோவானார் ராஜேஷ். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய், நடிப்பின் நாயகன் சூர்யா நடித்த நேருக்குநேர், அஜித் குமாரின் ரெட், சிட்டிசன், ஆஞ்சநேயா, சீயான் விக்ரம் நடித்த சாமி, விஜயகாந்தின் ரமணா, விஜய்யின் சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.அவரின் பெயரை சொன்னால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராஜேஷின் சாந்தமான முகமும், பெரிய கண்களும் தான். எப்பொழுதும் சாந்தமாகவே பேசுவார்.திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மன்னார்குடியில் 1949ம் ஆண்டு பிறந்த ராஜேஷ் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் கலைஞராகவும் இருந்து பிற நடிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்தவர் ராஜேஷ்.சின்னத்திரை பக்கமும் சென்று அலைகள், ரோஜா, ஆண்பாவம், சூர்யவம்சம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான மெரி கிறிஸ்துமஸ் தான் ராஜேஷ் நடிப்பில் வெளியான கடைசி படமாகும். அரசியல் பக்கமும் சென்று வந்தார் ராஜேஷ்.மேலும் அவர் சிறந்த நடிகர் மட்டும் அல்ல நல்ல எழுத்தாளரும் கூட. ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ராஜேஷுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.ராஜேஷின் மனைவி சில்வியா இறந்து 13 ஆண்டுகள் ஆகிறது.1974ம் ஆண்டு தன் திரைப்பயணத்தை துவங்கியவர் 2025ம் ஆண்டு இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். ராஜேஷ் இறந்துவிட்டார் என்கிற செய்தியை நம்ப கடினமாக இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பிரபலங்களும், சினிமா ரசிகர்களும்.