தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !
தமிழகத்தில் வரும் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பயிலரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த ஆண்டு ஒரே தவணையாக வரும் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
ஒன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு கல்வி நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம் அமைத்து சொட்டு மருந்து அளிக்கப்படும்.
இது தவிர நடமாடும் குழுக்கள் அமைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமானநிலையங்களிலும் மருத்துவ குழுக்கள் செயல்படும். சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கு அடையாளமாக குழந்தை மற்றும் சிறுவர்களின் விரலில் மை வைக்கப்படும். இதில் விடுபட்டவர்களின் கணக்கு எடுத்து, அவர்களுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது மாற்றப்பட்டு வரும் மார்ச் 10 -ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக முகாம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.