விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்படுகிறது…! இந்தியன் வங்கி அறிவிப்பு!
Indian bank announcement for farmers
சென்னை:
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்படுகின்றன.
இதன்மூலம், ஒவ்வொரு 100 ரூபாய் கடன் தொகைக்கு 58 காசு மட்டுமே வட்டியாக வசூலிக்கப்படும். மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டுபார்க்கும்போது இது மிகக்குறைந்த வட்டிவிகிதம் ஆகும்.
தங்கத்தின் சந்தைமதிப்பில் 80 சதவீதத்துக்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண் தங்கநகை கடன் திட்டத்தின்கீழ், பயிர் சாகுபடி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பிறவேளாண் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு கடன்பெறலாம்.
மேலும் சில குறுகியகால தங்கக்கடனும் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. அதில் பம்பர் அக்ரி ஜூவல் என்ற கடன் திட்டத்தின் கீழ் தங்கநகை மதிப்பில் 85 சதவீதத்தை கடனாக பெறுவதோடு, 6 மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
இதேபோல், சிறு, நடுத்தர தொழில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வு நோக்கங்களுக்கும் தங்கநகைக்கடன் வழங்கப்படுகிறது. வங்கியின் அனைத்து கிளைகளிலும் நகைக்கடன் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.