செங்கோட்டையன்–எடப்பாடி பழனிசாமி டெல்லிபயணம் ஏன்..?
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்துவதற்காக அவர் டெல்லி செல்வதாக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் செல்லும் நேரம், கட்சிக்குள் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள், இது அரசியல் பயணமாகத்தான் இருக்கும் என உறுதியிட்டு கூறுவதாக, அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவில் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் என்ன நடக்கிறது?அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் செப். 5 அன்று தெரிவித்திருந்தார். அதற்காக, 10 நாள் காலக்கெடுவையும் அவர் விதித்திருந்தார். அதற்கு மறுநாளே கட்சியில் செங்கோட்டையன் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.ஆனால், செங்கோட்டையனின் இந்த கருத்தை அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றிருந்தனர். ‘செங்கோட்டையனை சந்திப்பேன்’ என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.