செங்குன்றம் பஜார் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா ?
சென்னை மாநகராட்சிக்கு முகப்பாக அமையும் செங்குன்றம் பேரூராட்சி பஜார் சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டது.இந்த சாலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் நெல் லோடு வருகிறது.
இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அவை விற்பனை செய்யப்படுகிறது.மேலும் திருவள்ளூர் கூட்டுச்சாலை முதல் காமராஜர் சிலை வரை 300-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருக்கிறது.இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வணிகர்களும் மாணவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.கடந்த ஜூலை மாதம் செங்குன்றம் போலீசார் பாதுகாப்போடு சாலையின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி அதிகரித்து விட்டது.குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த பிரச்சனையை தீர்க்க மாநில நெடுஞ்சாலை துறையும் ,ஆவடி மாநகர போக்குவரத்து துறையும், செங்குன்றம் காவல் மாவட்ட காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.