கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
Migrant employ status in tamilnadu
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் 2 வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இந் நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாநில தொழிலாளர்களும் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் தொழிலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 சிறப்பு ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள வெளி மாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
எனவே அதுவரை வெளி மாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.