அனைத்து மாத்திரைகளுக்கும் “பார்கோடு” அவசியம் – மத்திய அரசு உத்தரவு
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுக்கும் ‘பார்கோடு’ அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த பார்கோட்டில் மருந்தின் பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவையும் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்ற முத்திரையுடன், நைஜீரியாவில் இறக்குமதியான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு சீனாவில் தயாரிக்கப்படும் தரக்குறைவான போலிமருந்துகளை , இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று கூறி நைஜீரியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக , மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இத்தகைய குளறுபடியை சமாளிக்கத்தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் பார்கோடு அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ஒரு பொருள் எங்கு எப்போது தயாரிக்கப்படுகின்றது போன்ற அணைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள “பார்கோடு” போன்ற தொழில்நுட்பம் பயன்படுகின்றது. இதன் மூலம் போலி மருத்துகளை அடையாளம் காணவும், தரமான இந்திய மருந்துகளின் சிறப்பு சீர்கெடாமல் இருக்கவும் வழி ஏற்படுகிறது.