தொலைகாட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிமுறை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை – டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டம்
நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களைத் தேர்வு செய்ய நேற்று கடைசி நாள். இதுகுறித்த தகவல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இந்த புதிய கட்டண விதிமுறை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லையென டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டமாக கூறியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமுமின்றி இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி சேவையை பெறும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம். அதாவது, மாத கட்டணமான 130 ரூபாயுடன், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகை 23 ரூபாயை சேர்த்து, மொத்தமாக 153 ரூபாய் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
இந்த 100 சேனல்களின் பட்டியலில், தூர்தர்ஷனின் 25 சேனல்களும் அடங்கும். 100க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு 25 இலவச சேனலுக்கும், கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதோடு, கட்டண சேனல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். அதேசமயம், ஒரு கட்டண சேனலுக்கு, மாதமொன்றுக்கு அதிகபட்சம் 19 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.