போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
Pollution Control Board warning!
போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
போகி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் சுற்றுசூழல் பாதிக்காமல் இருக்க புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
போகி பண்டிகை கொண்டாடபடுவதன் நோக்கம் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதே ஆகும். எனவே கடை மற்றும் வீடுகளில் தேவையற்ற பழைய பொருட்களை அதிகாலையில் எழுந்து தீயிட்டு எரிப்பது வழக்கம். இந்நிலையில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிப்பதால் காற்று மாசடைகிறது. மேலும், புகைமூட்டத்தால் சாலைகள் கண்ணுக்கு தெரியாமல் போகின்றன.
சுற்றுச் சூழலும் பாதிக்கிறது. மேலும், சுவாச பிரச்னை, கண் எரிச்சல், இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. மேலும், நச்சுக்காற்று, கரிப்புகை கலந்த பனிமூட்டம் ஆகியவற்றால் விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. புகைமூட்டத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
இதை மீறி செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போகி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 30 ரோந்துக் குழுக்கள் அமைப்பட்டு சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.