இந்திய கடற்படையில் முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா இணைப்பு…
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதற்காக கடற்படையின் கப்பல் பட்டறையில் நடந்த விழாவில் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஜெனரல் அனில் சவுகான், ‘‘இந்தியா வாங்கும் கடற்படை என்ற நிலையில் இருந்து கட்டமைப்பாளர் கடற்படை என்றகுறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது” என்றார். 77 மீட்டர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல் சுமார் 1490டன்னுக்கும் மேல் எடை கொண்டது. டீசல் எஞ்சின்-வாட்டர் ஜெட் ஆகியவற்றால் இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க்கப்பல் இதுவாகும்.இந்த கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக பயன்படும் வகையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வசாய் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க அர்னாலா கோட்டையின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.