ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்–உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டிருந்ததாவது:ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது ஊட்டிக்கு தினமும்சீசன் நேரங்களில் கார், வேன் உட்பட மொத்தம் 20,011 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2,002 வாகனங்களும் வருகின்றன. சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5,620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் உள்ளன. தவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்தும் இடங்களும் உள்ளன.இதேபோல, கொடைக்கானலில் சீசன் நேரங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2,100 வாகனங்களும் வருகின்றன. கொடைக்கானலில் 13,700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3,325 அறைகள் உள்ளன. கொடைக்கானலில் வாகன நிறுத்தும் இடங்கள்தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. லேக்ஏரியா பகுதியில்ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதை படித்துப் பார்த்த நீதிபதிகள் தெரிவித்ததாவது: சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்: ஊட்டி, கொடைக்கானலுக்கு இவ்வளவு வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்களின் நிலைமை என்ன ஆவது. இதனால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.தவிர, ஐஐடி, ஐஐஎம் சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.எனவே, கரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடைகாலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும்.இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகின்றனர், அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப் போகின்றனர், எங்கு தங்க உள்ளனர் என்பது போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்கவேண்டும். கண்டிப்பாக இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே மலையேற அனுமதிக்க வேண்டும். இதில், உள்ளூர் வாகனங்களுக்கும், அன்றாட தேவைகளுக்காக செல்லக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.இந்த இ-பாஸ் நடைமுறை குறித்து விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு செய்து தர வேண்டும். அத்துடன் ஊட்டி, கொடைக்கானலில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கும் ஆட்சியர்கள் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.