நீடாமங்கலத்தில் நம்மாழ்வார் நினைவு தினம்
நீடாமங்கலத்தில் நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு
நம்மாழ்வாரின் பணியை தொடர்வோம் என மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
நீடாமங்கலம் டிச.30
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நேற்று நீடாமங்கலம் பாலாஜி நகரில் உள்ள கிரீன் நீடா குறுங்காட்டில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் இராம.கந்தசாமி, சி.செந்தில்குமார், மன்னார்குடி நகர ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுபாஷ், நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் து.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன் நம்மாழ்வார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசுகையில், இயற்கை விவசாயத்தை பேணி காக்க பாடுபட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விட்டுச்சென்ற பணிகளை இளைய தலைமுறையினர் ஏற்று நடந்தால் மக்களின் வாழ்வு ஏற்றம் பெறும், சுற்றுச்சூழலை காக்க நாம் அனைவரும் முக்கிய தினங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்க வேண்டும் என்றார். விழாவில் தலைமை காவலர் செல்வகுமார், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மணிவண்ணன், கோவில்வெண்ணி மோகன்தாஸ், மண்ணின் மைந்தர்கள் நிர்வாகி நிரஞ்சன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நம்மாழ்வார் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வோம் என மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.