தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில்….!
தனது தாயாரின் இறுதிச்சடங்குமுடிந்த சிறிது நேரத்தில் மேற்குவங்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயில் வண்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நேரடியாக தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்து கொண்டார். பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகள் எதுவும் ரத்துச்செய்யப்படவில்லை என்றும், நிகழ்ச்சிகளில் பிரதமர் காணொளி வாயிலாக கலந்து கொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்து.
காலையில் தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். விழாவில் மம்தா பானர்ஜி கூறியதாவது: மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, இன்று ஒரு துக்கமான நாள். உங்களின் செயல்கள் மூலம் உங்களின் தாயை நேசிப்பதற்கான பலத்தையும், ஆசீர்வாதத்தையும் கடவுள் உங்களுக்குத் தரட்டும் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் இன்று மேற்கு வங்கத்திற்கு வருவதாக இருந்தீர்கள். அதற்தாக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் அன்பிற்குரிய தாயாரின் இழப்பால் உங்களால் நேரில் வரமுடியாவிட்டாலும், காணொளி மூலமாக எங்களுடன் நீங்கள் மனதளவில் உடன் இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துக் கொண்டு நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு வருகிறீர்கள். உங்கள் தாய் உங்களுக்கு மட்டும் தாய் இல்லை. அவர் எங்களுக்கும் தாயார் தான்” என்று மம்தா பானர்ஜி பேசினார். மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு கைகூப்பி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்