டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்துதெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் சின்னசேலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு, விவசாயிகளுடன் கலந்துரையாடல், டிரோன் மூலம் பயிர்களுக்கு இயற்கை மருந்து தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி மற்றும் விவசாய கண்காட்சி சின்னசேலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.இதற்கு சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி முன்னிலை வகித்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.தொடர்ந்து கத்திரிக்காய் தோட்டத்தில் டிரோன் மூலம் எவ்வாறு இயற்கை மருந்தை தெளிக்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருந்து தெளிப்பதால் மருந்து செலவு குறையும், பயிர்கள் சேதமடையாது. மேலும் ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்படாது. இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் அடைய முடியும்.எனவே டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் உத்தியை விவசாயிகள் பின்பற்றி பயன் அடைய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.