பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயிற்சி நிறைவு செய்த இளம் ராணுவ அதிகாரிகள் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த தொப்பிகளை தூக்கி போட்டும் துப்பாக்கிகளை ஒரு சேர உயர்த்தியும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் தண்டால் எடுத்து மண்ணை முத்தமிட்டனர். மேலும் இளம் ராணுவ அதிகாரிகளின் தோள்பட்டையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஸ்டாரை அவரது பெற்றோர் திறந்து வைத்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.