மத்திய நிதி மந்திரி கண்டனம் –பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை போலீசார் நேற்று பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவை கைது செய்தனர். சென்னை திநகரில் உள்ள எஸ்ஜி சூர்யா வீட்டிற்கு நேற்று இரவு 10 மணியளவில் வந்த மதுரை போலீசார் சூர்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் , எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் , . பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குறியது. மலக்குழி மரணங்களின் மீது முதல் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யா வை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? முதல் அமைச்சர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம். என பதிவிட்டுளார்.