பாரதியார் படித்த பள்ளி நிலத்தை மீட்க வழக்கு–அரசு பதிலளிக்க உத்தரவு.
. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எட்டையபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார் படித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் இந்தப் பள்ளியில் தான் படிக்கின்றனர். இப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக 5.03 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு அரசு 1966ல் ஒதுக்கியது. இந்த நிலம் உரிய அனுமதியின்றி சிலருக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால், மாணவர்களின் நலன் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி மைதானத்திற்கான நிலத்தை விற்பனை செய்ததை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பள்ளி மைதான நிலத்தை மீட்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர், மனுவிற்கு பள்ளிக் கல்வித்துறை செயலர், நில நிர்வாக ஆணையர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்..