மருதமலையில் அடாவடி வசூல் கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர்: வாகனம் பார்க் செய்ய 200 ரூபாய் முருகா! மருதமலையில் அடாவடி வசூல் கோவை:மருதமலை கோவில் அடிவாரத்தில் வாகனங்களை பார்க் செய்வதற்கு, தமிழகத்தில் எங்கேயுமே இல்லாத வகையில் வேனுக்கு, அதிகபட்சமாக 200 ரூபாய் கட்டணமாக வசூலிப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கோவையிலுள்ள மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும், நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
ஆண்டுக்கு பல கோடிக்கு வருவாயை ஈட்டித்தரும் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கழிப்பிடத்துக்கும், குடிநீர் வசதிக்கும், வாகன பார்க்கிங் வசதிக்கும் கடும் சிரமப்படுகின்றனர்.
விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி தேடி, கடைசியில் சாலையோரங்களில் நிறுத்துகின்றனர்.இப்படி சாலையோரம் வாகனம் நிறுத்தவும், கட்டண சீட்டை கிழித்துக்கொடுத்து கட்டாய வசூலில் ஈடுபடுகிறது சோமையம்பாளையம் ஊராட்சி.கடந்த ஆண்டு மருதமலை அடிவாரத்திலுள்ள வண்டிப்பேட்டை 21 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. அப்போதே டெம்போ வேனுக்கு பார்க்கிங் கட்டணமாக, 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற ஏலத்தில், ரூ.18 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆனால் அப்போதிருந்து டெம்போ வேனுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த அநியாய வசூல் குறித்து, சோமையம்பாளையம் ஊராட்சித்தலைவர் ரங்கராஜிடம் கேட்டபோது, ”நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை பார்த்தேன். இது குறித்து ஏலதாரரை அழைத்து விசாரிக்கிறேன். கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறேன். நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கிறேன்,” என்றார்.ஊராட்சித்தலைவருக்கு தெரியாமல் இத்தனை நாட்களாக, இந்த அடாவடி வசூல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பரவாயில்லை…’இப்போது தெரிந்து விட்டது’. நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என பார்ப்போம். Sairam Ajit கோயம்புத்தூர்:Reporter