மனு அளித்த ஒரே நாளில் வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர்
கோவையில் மாற்றுத்திறனாளி மகனுடன் தங்க இடமின்றி தவித்து வந்த பெண்ணுக்கு மனு அளித்த 24 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை ஆட்சியர் சமீரன் நேரில் சென்று வழங்கினார். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தை சேர்ந்தவர் ஷீலா. கணவரை இழந்த இவர் 14 வயது மாற்றுத்திறனாளி மகன் ராமசாமியுடன் வசித்து வருகிறார். தங்க இடம் இன்றி மகனுடன் சிரமம் பட்டு வந்த ஷீலாவை மணியம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டில் தங்க வைத்து உறுதுணையாக இருந்தார்.மாற்றுத்திறனாளி மகனை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் ஷீலாவால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி உதவி தொகையே ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. இதை அடுத்து மூதாட்டி மணியம்மாள் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஷீலா மற்றும் அவரது மகனை அழைத்து சென்று வீடு கேட்டு ஆட்சியர் இடம் மனு அளிக்கவைத்தார்.இந்த மனு மீது உடனடியாக பரிசீலனை செய்த ஆட்சியர் சமீரன் மனு அளித்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேல்வரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்டப்பகுதி குடியிருப்பில் உடனடியாக தரைத்தளத்தில் வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து தர உத்தரவிட்டார். வீடு ஒதுக்கீட்டிற்கான உத்தரவை ஆட்சியர் சமீரன் ஷீலா வசிக்கும் வீட்டுக்கு சென்று நேற்று வழங்கினார்.அப்போது ஷீலா மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கு மூதாட்டி மணியம்மாளுக்கு ஆட்சியர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒதுக்கீடு செய்ய பட்ட வீட்டிற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேல்வாரியத்திற்கு செலுத்தவேண்டிய ரூ.36,000, மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியில் இருந்து வழங்கினார். இதனால் வட்டாச்சியர் சமீரனுக்கு ஷீலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.