fbpx
Others

கார்கே– தேர்தல் ஆணையத்தின் பதில் ஆச்சரியம் அளிக்கிறது…

 “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப்பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியமாக அளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளில் வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடுவது, அவற்றின் வேறுபாடு இருப்பது குறித்து கவலை தெரிவித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான முடிவை உருவாக்கும் முயற்சி இது” என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை காட்டமாக பதில் அளித்திருந்தது. இந்தக் கடிதத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை பதில்அளித்துள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: “அந்தக் கடிதம் வெளிப்படையான ஒன்று. அது எங்களின் கூட்டணித் தலைவர்களுக்கு எழுதப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் அதன் முன்பு வைக்கப்பட்ட பல நேரடி புகார்களை புறக்கணித்து விட்டு, பதில் அளிப்பதற்கு இந்தக் கடிதத்தை தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. அந்தக் கடிதத்தின் மொழியில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும், அதுகுறித்து நான் அழுத்தம் கொடுக்கப்போவதில்லை. அவர்கள் பணிபுரியும் சூழலில் உள்ள அழுத்தத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.சுமுகமான, சுதந்திரமான வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை, அரசியலமைப்பிலிருந்து பெற்றிருப்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனினும், தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலான ஆளுங்கட்சித் தலைவர்களின் அப்பட்டமான மதவெறி மற்றும் சாதிவெறியைத் தூண்டும் அறிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டாதது புதிராகவே இருக்கிறது.அதேநேரத்தில், உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும், ‘எந்த ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களின் மொத்த வாக்களர்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதற்கு சட்டபூர்வமாக தேர்தல் ஆணையம் கட்டுப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்று நான் குழப்பம் அடைந்துள்ளேன். என்னைப் போலவே வாக்காளர்களும் குழப்பமடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இறுதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை பாதுகாப்பது நமது கூட்டுப்பொறுப்பு என்ற கடிதத்தில் உள்ள வரிகளுக்கு தேர்தல் ஆணையம் எதுவும் குறிப்பிடாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன். இதனை இன்னும் தெளிவுபடுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் பக்கம் நிற்கும், ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வலிமைக்காக அதன் பக்கம் நிற்கும். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அதன் அதிகாரிகள் தற்போது முடிவு செய்யவேண்டும்” என்று கார்கே தெரிவித்துள்ளார். முன்னதாக, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை 5 பக்க கடிதம் எழுதி இருந்தது. அக்கடிதத்தில், தேர்தல்வாக்குப் பதிவுகளை வெளியிடுவதில் தாமதமும், முரண்பாடுகளும் உள்ளது என்ற மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், “எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து, விரும்பத்தகாதது, ஆதாரமற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாரபட்சமான தகவல்களை உருவாக்கும் முயற்சி” என்று காட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ‘தேர்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கும்நிலையில்,பொதுவெளியில் வைக்கப்பட்ட கார்கேவின் கடிதம் மிகவும் விரும்பத்தகாத ஒன்று. சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடந்துகொண்டிருக்கும் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்துதல், தவறாக வழிநடத்துதல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைகள் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள், தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் வகையில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உள்ளத்தில் சந்தேகத்தை விதைக்கும் வண்ணமாக உள்ளது. நீங்கள் கூறியிருப்பது இறுதி முடிவில் தாக்கம் செலுத்தும் முயற்சியா? அப்படியான உள்நோக்கம் உங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close