காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற மூன்று நாள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வழக்கமாக ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் மட்டுமே பங்கேற்கும் இந்த கூட்டத்தில் முதல் முறையாக வனத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். அதன் அடையாளமாக தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றை நட்டு வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரவுடிகளில் வட சென்னை, மத்திய சென்னை ரவுடிகள் என பிரிவினை செய்வது தவறானது எனவும், ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். குடிசைப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதை குறிப்பிட்ட முதலமைச்சர், குற்றச்செயல்களில் இதுபோன்ற அடையாளப்படுத்தல்களும் கூடாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாதி மோதல் பிரச்சனைகள் சட்டம் ஒழுங்கு பிர்ச்சனைகள் மட்டும் அல்ல, அவை சமூக ஒழுங்கு பிரச்சனை. கிராமப்பகுதிகளில் சாதிய பிரச்சனைகள் அதிகம் உள்ளன. படிக்காதவர்களால் மட்டும் அல்ல படித்து முடித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களாலும் சாதிய மோதல்கள் உருவாகின்றன. இதுபோன்ற இளைஞர்களை கண்டறிந்து மன மாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி நல்வழிப்படுத்த வேண்டும்.
மத மோதல்களை தடுக்கும் சிறப்பு காவல் பிரிவு கோவையில் மட்டும் அல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க அலோசிக்கப்படும். ஒரு காலத்தில் மதம் சார்ந்து மட்டுமே இருந்து மத நடவடிக்கைகள் தற்போது அரசியல் நோக்கம் கொண்டதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. குறிப்பாக சாதி, மத மோதல்களுக்கு முக்கிய காரணமே சமூக வலைதளங்கள் தான். நவீன தொழில்நுட்பத்தை அழிவுக்கு பயன்படுத்துவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.