பொன்னேரி அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை…..?
பொன்னேரி அரசு மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறையால், அங்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இங்கு போதிய டாக்டர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பொன்னேரியில் அரசு மருத்துவமனையில் ஒரு தலைமை மருத்துவர், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஊழியர் பணியிடங்களில், 6 உதவி மருத்துவர்கள், 2 செவிலியர்கள், ஒரு துப்புரவு பணியாளர் மற்றும் 4 மருத்துவ ஊழியர்களின் என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, தாய்-சேய் நலம், கர்ப்பகால சிகிச்சை, அவசரகால சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ பிரிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் மீஞ்சூர், காட்டூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரணி, அத்திப்பட்டு, மணலி புதுநகர், சோழவரம், பெரியபாளையம் உள்பட பல்வேறு பகுதி மக்கள் நாள்தோறும் சிகிச்சை பெறுவதற்கு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் விபத்துகளில் படுகாயம் அடைபவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல், முதலுதவி சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இங்கு உரிய மருத்துவ பிரிவுக்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், தனியார் கிளினிக்குகளில் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சை பெற நோயாளிகள் அலைந்து வருகின்றனர். எனவே, பொன்னேரி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்பி, சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நோயாளிகள் உரிய சிகிச்சை பெற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.