திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண்–இன்றுவழக்கின்விசாரணை…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும் தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.கோயில் நிர்வாகம் தரப்பில் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 12-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, “நீதிபதி தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த தூணானது தீபத்தூண் அல்ல. எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதாடினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று விசாரணைக்கு வந்த போது காரசார வாதங்கள் நடைபெற்றன. மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நடைபெற்ற விசாரணையில், கோயில் தேவஸ்தானம் சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையில் பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்றும்படி தனிநபர் கோருவது ஏற்புடையதல்ல. இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலை மீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பசுமலை, கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், அரிட்டாப்பட்டி, யானைமலை ஆகிய குன்றுகளின் மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சமணர்கள் வசித்து உள்ளனர்.இரவு நேரங்களில் சமணர்கள் குன்றுகளின் உச்சியில் அமர்ந்து ஆலோசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களின் வசதிக்காக கல் தூண் அமைத்து அதில் விளக்கு ஏற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். எனவே திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் என தற்போது கூறப்படும் அந்த தூண், சமணர்கள் எழுப்பிய தூண்தான் என்று வாதிடப்பட்டது.சிக்கந்தர் தரப்பில் வைத்த வாதத்தில், தீபத்தூண் இருக்கும் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்புதான் அங்கு தீபம் ஏற்றுவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நேற்று காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி அந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெறஉள்ளது.